முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து விகாரை அமைத்துள்ள பௌத்த மதகுருவால், ஆலய வளாகத்தில் கட்டப்பட்டிருந்த நந்திக்கொடிகள் அறுத்து எறியப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஆலய நிர்வாகத்தால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 6ஆம் திகதி நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் 108 பானைகளில் பொங்கல் வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இதைனையொட்டி ஆலய வீதியின் ஓரமாக நந்தி கொடிகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் நேற்று, குருகந்த ரஜமகா விகாரதிபதியால் நந்திக்கொடிகள் அறுத்து எறியப்பட்டுள்ளன. நந்திக்கொடிகளை கட்டியிருந்த கம்பங்கள் பிடுங்கி ஓரிடத்தில் அடுக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் நிலவும் சர்ச்சை தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெற்று, இரண்டு தரப்பினரும் அமைதியான முறையில் தமது ஆலயங்களில் வழிபாடுகளை மேற்கொள்ள முடியும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த தீர்ப்புக்கு ஆட்சேபனை தெரிவித்து வவுனியா மேல் நீதிமன்றத்தில் பௌத்த மதகுரு சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியா மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
அன்றைய தினம் மேல் நீதிமன்றின் வழக்கு விசாரணையின்போது பிள்ளையார் ஆலய பகுதியில் ஆலய நிர்வாகத்தினரோ பௌத்த மதகுருவோ எவ்வாறான அபிவிருத்தி வேலைகளையும் செய்ய முடியாது எனவும் ஏற்கனவே அங்கே இருக்கின்ற அமைப்புகள் அப்படியே இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் விதமாக பௌத்த மதகுரு ஆலயத்தில் கட்டப்பட்டிருந்த அந்த நந்திக்கொடிகளை அறுத்தெறிந்துள்ளமை குறிப்பிடத்தக்து.

