சமயத் தலைவர்கள் சொல்வதற்காக அனைத்தையும் மாற்ற முடியாது- ஏ.எச்.எம்.பௌசி

259 0

முஸ்லிம்களின் விவாக சட்டத்தை மாற்றம் செய்வது உட்பட பல விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் எம்.பி.க்களிடையே ஏற்பட்டுள்ள உடன்பாடு குறித்து, முஸ்லிம் சமய தலைவர்கள் உடன் மேலும் பல கலந்துரையாடல்களை நடாத்த முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி தெரிவித்துள்ளார்.

இருப்பினும், முஸ்லிம் சமய தலைவர்கள் சொல்வதற்காக அனைத்து விடயங்களையும் மாற்றம் செய்ய முடியாது எனவும் சிரேஸ்ட பாராளுமன்ற உறுப்பினர் பௌசி  ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு எடுத்த சில தீர்மானங்களுக்கு முஸ்லிம் சமய தலைவர்கள் தங்களது உடன்பாட்டைத் தெரிவிக்க வில்லையென முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சர் அப்துல் ஹலீம் நேற்று (15) தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் பௌசியிடம் வினவியதற்கே இவ்வாறு பதிலளித்துள்ளார்.

சிறந்த முறையிலேயே இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. முஸ்லிம் சமயத் தலைவர்களிடம் மாற்றுக் கருத்துக்கள் இருந்தால், அவற்றைக் கலந்துரையாடி, அது குறித்து பாராளுமன்ற முஸ்லிம்கள் குழுவிடம் முன்வைக்க அமைச்சர் ஹலீமுக்கு நடவடிக்கை எடுக்க முடியும்.

முஸ்லிம் திருமண சட்டத் திருத்தம் தொடர்பில் முஸ்லிம் சமய தலைவர்களிடத்தில் பரஸ்பர விரோத கருத்துக்களைக் கொண்டிருப்பதன் காரணமாகவே, அந்த நடவடிக்கையை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பௌசி சகோதர ஊடகத்திடம் மேலும் கூறியுள்ளார்.