சேலம் உருக்காலையை தனியாருக்கு விடமாட்டோம் – எடப்பாடி பழனிசாமி உறுதி

409 0

சேலம் உருக்காலையை தனியாருக்கு விடமாட்டோம் என சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினர். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் உருக்காலை அண்ணாவின் கனவு திட்டம். திராவிட இயக்கத்தின் முதல் லட்சிய திட்டம். அண்ணா முதல்வராக இருந்த போது 23.7.1967 அன்று சேது சமுத்திர திட்டம், சேலம் உருக்காலை ஆகியவற்றை கொண்டு வருவதற்காக மத்திய அரசின் கவனத்தை ஈர்த்து எழுச்சி நாள் போராட்டத்தை நடத்தினார்.

இதை 5 ஆண்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று கலைஞர் முதல்வராக இருந்த போது அன்றைய பிரதமர் இந்திராகாந்தியை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். 14.4.1970 அன்று 4-வது ஐந்து ஆண்டு திட்டத்தில் சேலம் உருக்காலையும் சேர்க்கப்பட்டது.

16.9.1970-ல் இந்திராகாந்தி நேரில் வந்து திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். மிகவும் லாபகரமாக இந்த ஆலை இயங்கி வந்தது.

பின்னர் பல்வேறு காரணங்களால் இந்த நிறுவனம் நஷ்டம் அடைந்ததாக கூறப்பட்டது. மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொண்டதால் இந்த ஆண்டில் நெருக்கடி ஏற்பட்டது.

ரூ.72 ஆயிரம் கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த ஆலை மூலம் 2500 பேருக்கு நேரடியாகவும், 5 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை கிடைத்தது.

முக ஸ்டாலின்

 

இது 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆலை. தற்போது இதை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வருகிற 1.8.19-க்குள் டெண்டர் எடுக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய பா.ஜனதா அரசின் இந்த விரோத போக்கை தடுத்து நிறுத்த வேண்டும்.

தனியாருக்கு இந்த ஆலையை தாரை வார்க்க கூடாது. அண்ணாவின் கனவு திட்டமாக சேலம் உருக்காலை தனியாருக்கு செல்வதை தடுத்து நிறுத்த முதல்-அமைச்சர் பிரதமரை நேரில் சந்தித்து வற்புறுத்த வேண்டும். தி.மு.க. உறுப்பினர்களும் அவருடன் சென்று வலியுறுத்த தயாராக இருக்கிறார்கள்.

அமைச்சர் சம்பத்:- சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது என்பதுதான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு இது குறித்து ஏற்கனவே நான்கு முறை மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சரும், பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். பொதுப்பணிதுறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது என்பதில் இந்த அரசு உறுதியாக இருக்கிறது.

எனவே சேலம் உருக்காலை தனியாருக்கு செல்வதை தடுத்து நிறுத்த அனைத்து முயற்சிகளை எடுப்போம்.

அமைச்சர் தங்கமணி:- நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 10 சதவீத பங்குகளை அன்றைய காங்கிரஸ் மத்திய அரசுவிற்க முன் வந்தது. அதை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டவர் ஜெயலலிதா. 5 சதவீத பங்குகளை தமிழ்நாடு அரசே வாங்கியது.

மு.க.ஸ்டாலின்:- இதற்கு தி.மு.க. சார்பிலும் கடுமையாக கண்டனம் தெரிவித்தோம். அன்றைய பிரதமரை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுத்தோம்.

இப்போது சேலம் உருக்காலை தனியாருக்கு சென்றுவிடக்கூடாது என்பதில் தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே சேலம் உருக்கு ஆலையை தனியாருக்கு ஒப்படைப்பதற்காக முயற்சி செய்தார்கள். அது அம்மாவுடைய அரசால் தடுத்து நிறுத்தப்பட்டது. பல்வேறு வழிகளிலே முயற்சி செய்தார்கள். அந்த முயற்சிகள் எல்லாம் முறியடிக்கப்பட்டது. இப்பொழுது எதிர்க்கட்சி தலைவர் சொல்லி இருக்கின்றார், பத்திரிகையிலும் வந்திருக்கின்றது. இன்றைக்கு தனியாருக்கு தாரை வார்ப்பதற்காக டெண்டர் விடுவதற்காக பத்திரிகை செய்தி வந்திருக்கின்றது.

ஆகவே, நீங்கள் சொல்லியதைப் போல எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்களும், உங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்களும், சேர்ந்து முதற்கட்டமாக பிரதமரையும், சம்பந்தப்பட்ட துறை மத்திய அமைச்சரையும் சந்தித்து, இதை கைவிட வேண்டும்; இது ஒரு முக்கியமான திட்டம்; பிரதான திட்டம்;

ஆகவே, இது மாநிலத்திற்கு ஒரு பொதுத்துறையாக இருக்கின்ற காரணத்தினாலே, பொதுத்துறை இப்படி ஒவ்வொன்றாக எடுக்கின்ற போது மக்கள் மத்தியிலே ஒரு தவறான எண்ணம் ஏற்படும் என்பதை எல்லாம் சுட்டிக்காட்டி, இன்னும் என்னென்ன சரத்துகள் இருக்கின்றதோ அதை எல்லாம் சேர்த்து, ஒரு மனுவாக, அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் ஆகிய அனைத்து கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து பிரதமரையும், சம்பந்தப்பட்ட துறை மத்திய அமைச்சரையும் சந்தித்து அழுத்தத்தை கொடுப்போம். அதுமட்டுமல்லாமல், பாராளுமன்றத்திலே இரு அவைகளிலும் நாம் இந்த பிரச்சனையை எழுப்பி, இதை தடுத்து நிறுத்துவதற்கு உண்டான ஆக்கபூர்வமான திட்டத்திற்கு எங்களுடைய அரசும், அ.தி.மு.க.வும் முழு ஒத்துழைப்பு நல்கும் என்பதை தங்கள் வாயிலாக எதிர்க்கட்சி தலைவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து பேசிய சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர் ராமசாமி, காங்கிரஸ் கட்சியும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார்.