மும்பை விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் விமானம் தரையிறங்கும்போது ஓடுபாதையில் இருந்து விலகியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.மும்பையில் கடந்த 4 தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், மும்பை மாநகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. கனமழை இன்னும் 3 தினங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழையால் பஸ், ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஜெய்ப்பூரில் இருந்து நேற்று இரவு 11.45 மணியளவில் மும்பை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் பிரதான ஓடுபாதையில் தரையிறங்கியது. அப்போது, விமானம் நிற்க வேண்டிய இடத்தில் நிற்காமல் ஓடுபாதையைவிட்டு விலகிச்சென்றது.
கனமழை காரணமாக ஓடுபாதையில் ஈரப்பதம் அதிகமாக இருந்ததால், விமானம் ஓடுபாதையை விட்டு விலகிச்சென்றதாக தெரிகிறது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அந்த விமான ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டது. இரண்டாம் நிலை ஓடுபாதையில் விமானங்கள் இயக்கப்பட்டன. ஒரு சில விமானங்கள் அகமதாபாத், பெங்களூரு உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.