ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியை தோற்கடிக்க ஜனாதிபதியுடன் ஒப்பந்தத்துக்குச் செல்லவேண்டும்.அத்துடன் மக்கள் விடுதலை முன்னணி ஒருபோதும் தனது வேட்பாளரை நிறுத்தப்போவதில்லை.அவர்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாகவே இருப்பார்கள் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
சோஷலிச மக்கள் முன்னணி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பலரும் பலரது பெயர்களைத் தெரிவித்து வருகின்றனர். என்றாலும் பொதுஜன பெரமுன கட்சி இதுவரை யாருடைய பெயரையும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. அத்துடன் இது தொடர்பாக இதுவரை அறிவிக்கப்படாமல் இருப்பது எமது பக்கம் இருக்கும் குறையாகும். வேட்பாளரின் பெயரை அறிவித்தால்தான் தற்போது இருந்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக் கும் கட்சிகளது தலைவர்களின் அடுத்த கூட்டத்தின்போது இது தொடர்பாக எமது நிலைப்பாட்டை நாங்கள் அறிவிக்க இருக்கின்றோம். அதேபோன்று வேட்பாளராக தற்போது தெரிவிக்கப்படும் கோத்தபாய ராஜபக் ஷ, ஷமல் ராஜபக் ஷ ஆகியோருக்கு எமது கட்சியின் வேலைத்திட்டத்தை கையளித்திருக்கின்றோம். அதேபோன்று பசில் ராஜபக் ஷவிடமும் எதிர்வரும் தினங்களில் கையளிக்க இருக்கின்றோம்.
ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியைத் தோற்கடிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நாங்கள் ஒப்பந்தம் ஒன்றுக்குச் செல்ல வேண்டும். எங்களுக்கு ஜனாதிபதியுடன் ஆரம்பத்தில் கோபம் இருந்திருக்கலாம்.
என்றாலும் இறுதியில் அவர் எமது தலைவரை பிரதமராக்கி எங்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கி அரசாங்கத்தைக் கொண்டுசெல்ல நடவடிக்கை எடுத்திருந்தார். ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை காரணமாக ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதியை விமர்சித்து வருகின்றது. ஆனால் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் தற்போது ஏன் ஜனாதிபதியை விமர்சிக்க வேண்டும்.
பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைத்து பயங்கரவாத தாக்குதலுக்கு ஜனாதிபதியே பொறுப்புக் கூற வேண்டும் என்று காட்டும் வகையில் ஐக்கிய தேசிய கட்சி ஒரு பக்கத்தில் செயற்பட்டுவரும் நிலையில் பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர் சிலர் பத்திரிகையில், தாக்குதலுக்கு ஜனாதிபதியே பொறுப்புக்கூற வேண்டும் எனத் தெரிவித்து வருகின்றனர்.
இவர்கள் திட்மிட்டு ஜனாதிபதியை இந்த விடயத்தில் சிக்கவைக்க முயற்சிக்கின்றார்களா என்ற சந்தேகம் எழுகின்றது.
ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை தங்களின் கட்சி நியமிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி அறிவித்திருக்கின்றது. ஆனால் இவர்கள் ஒருபோதும் வேட்பாளரை நியமிக்க மாட்டார்கள். அவ்வாறு நியமிப்பதாக இருந்தால் மக்கள் மத்தியில் பிரபலம் இல்லாத ஒருவரையே நியமிப்பார்கள்.
மக்கள் விடுதலை முன்னணி ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாகவே செயற்படும். ஏனெனில் இவர்கள் மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க பிரசாரம் செய்தவர்கள். மீண்டும் ராஜபக்ஷவினர் ஆட்சிக்கு வர விரும்ப மாட்டார்கள். அதனால் மக்களை ஏமாற்றுவதற்கே தங்களின் வேட்பாளர் ஒருவரை களமிறக்கப்போவதாக தெரிவித்து வருகின்றனர் என்றார்.

