ஐ.எஸ். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்காக, இந்திய புலனாய்வுத்துறையுடன், இலங்கை இராணுவம் இணைந்து செயற்படுவதாக, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
மாதுறுஓயா இராணுவப் பயிற்சி முகாமில், இராணுவ சிறப்புப் படையினர் பயிற்சியை முடித்து வெளியேறும் நிகழ்வில், பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.
“பாதுகாப்பை உறுதி செய்திருந்தாலும் கூட, எந்த நேரத்திலும் நெருக்கடி ஏற்படலாம். எந்த நாட்டிலும் அது இயல்பு.
நாட்டின் புலனாய்வு விடயங்களில் இந்தியப் புலனாய்வு அமைப்புகளுடன், ஒத்துழைத்துச் செயற்படுகிறோம்.
அனைத்துலக பயங்கரவாதத்துக்கு எதிராக நாங்கள் போராடுவதால் அரசாங்கத்துக்கும் இராணுவத்துக்கும் இடையே ஒரு தொடர்பு இருக்க வேண்டும்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும், குற்றப் புலனாய்வுப் பிரிவு, பொலிஸார், பாராளுமன்றத் தெரிவுக் குழு உள்ளிட்ட எந்தவொரு விசாரணைக்கும் ஒத்துழைத்துச் செயற்பட இராணுவம் விரும்புகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

