தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன மற்றும் சட்ட ஒழுங்கு முன்னாள் அமைச்சர்கள் இருவரையும் அந்த குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழு இதுவரையில் 7 தடவைகள் கூடியுள்ளது.
இந்த அமர்வுகளில் பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட, தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரி சிசிர மெண்டிஸ் மற்றும் நாலக டி சில்வா, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா, காத்தான்குடி பொலிஸில் சேவையாற்றிய முன்னாள் பொறுப்பதிகாரி மற்றும் தற்போதைய பொறுப்பதிகாரி ஆகியோருடன், சுஃபீ முஸ்லிம் அமைப்பின் பிரதிநிதி மற்றும் சிலோன் தௌஹீத் ஜமாத்தின் செயலாளர் அப்துல் ராசிக் ஆகியோரிடம் சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளன.
இவர்கள் வழங்கிய சாட்சியங்கள் மூலம் பல உண்மைகள் அம்பலமாகியுள்ளன. இதனையடுத்து நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு எதிர்ப்புகளும் வெளியிடப்பட்டன. குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை நிறுத்துமாறு கோரியிருந்தார்.
எனினும் சர்ச்சைகளுக்கு மத்தியில் குறித்த குழுவின் செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான நிலையிலேயே பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

