வவுனியா வைத்தியசாலைக்கு ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அகதிகள் சிகிச்சைக்காக இன்று பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர்.

 

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் காரணமாக நீர்கொழும்பில் தங்கியிருந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு அகதிகளில் ஒரு தொகுதியினர் இரண்டு கட்டமாக அழைத்து வரப்பட்டு வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தங்க வைக்கப்பட்டவர்களில் 10 பேர் வரையிலானோர் சிக்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர்.

சுமார் இரண்டு மணிநேரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று மருந்துகளைப் பெற்ற பின் மீண்டும் அவர்கள் பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

எனினும் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இவ் அகதிகள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு செய்தி சேகரிக்க தடை விதித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.