இரகசிய தகவல்களை பகிரங்கப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் – விஜேதாச

222 0

இரகசிய தகவல்கள் மற்றும் ஆவணங்களை யாரேனும் ஒரு தரப்பினருக்கு பகிரங்கப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், ‘1955ஆம் ஆண்டு 32 ஆம் இலக்க உத்தியோகப்பூர்வ இரகசிய தகவல் சட்டத்திற்கு அமைய, பாதுகாக்க வேண்டிய இரகசிய தகவல்கள் மற்றும் ஆவணங்களை யாரேனும் ஒரு தரப்பினருக்கு பகிரங்கப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

அவ்வாறான தகவல்களை பெறுவதற்கு உரிமை இல்லாத ஒருவர் அவற்றை தன்வசம் வைத்திருப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

அரச புலனாய்வு பிரிவினரிடம் மாத்திரம் காணப்பட வேண்டிய தகவல்களை, அதிகாரமற்ற யாரேனும் ஒருவர் பெற்றுக்கொள்வதும், அதனை பகிரங்கப்படுத்துவதும், 14 வருடங்களுக்கு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டிய மற்றும் 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படக்கூடிய குற்றமாகும்.

இந்த விடயங்களை புறந்தள்ளி, நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமித்து, இரகசிய புலனாய்வுத் தகவல்களை அம்பலப்படுத்துவதால் நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.