கண்காணிப்புக் கருவிகளை வழங்குமாறு இலங்கையிடமிருந்து சீனாவுக்கு கோரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை என்று இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான் தெரிவித்துள்ளார்.

தீவிரவாத முறியடிப்பு பொறிமுறைக்காக கண்காணிப்புக் கருவிகளை சீனா வழங்கவுள்ளதாக வெளியாகிய தகவல்கள் குறித்து, எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
“இலங்கையிடமிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டால், சீனா உதவத் தயாராக இருக்கிறது. இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்திடம் இருந்து எந்தக் கோரிக்கைகளும் விடுக்கப்படவில்லை.
நாட்டின் இறைமைக்கு சீனா முக்கியத்துவம் அளிக்கிறது. இன்னொரு நாட்டின் உள் விவகாரங்களில் எமது நாடு தலையீடு செய்யாது. இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் அடிப்படையில், அவசரத் தொலைத்தொடர்புக் கருவிகள், வெடிபொருட்களை செயலிழக்கச் செய்யும் கருவிகளை இலங்கைக்கு சீனா அனுப்பி வைக்கவுள்ளது. எனினும் சீன இராணுவத்தினர் இதில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

