அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முழு ஆதரவு – மஹிந்த

211 0

ஐக்கிய தேசிய கட்சியின் முறையற்ற செயற்பாடுகளின் விளைவே இன்று அனைத்து தரப்பினருக்கும் தாக்கம் செலுத்துகின்றது என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முழுமையான ஆதரவு வழங்குவோம் என்றும் குறிப்பிட்டார்.

விஜயராம மாவத்தையில் உள்ள  எதிர்க்கட்சி  தலைவரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஒரு தனி நபரை  இலக்கு வைத்து நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரவில்லை. ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகத்தினால்  ஏற்பட்ட  விளைவுகளுக்கு தீர்வை காணவே  நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டது.

ஆனால் இவ்விடயத்தை ஆளும் தரப்பினர் முழுமையாக தமது  விருப்பத்திற்கு இணங்க அரசியல் பிரச்சாரமாக்கி விட்டார்கள்.  எதிர் தரப்பினர் முழுமையான முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்படுகின்றது என்ற  நிலைப்பாட்டை தோற்றுவித்து விட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.