தமிழருக்கு மைத்திரி அரசு தீர்வு வழங்காது-மனோ கணேசன்(காணொளி)

390 0

manoதற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வை வழங்கும் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அரச கரும மொழிக் கொள்கை தொடர்பாக நியதிச் சட்ட சபைத் தலைவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு இன்று கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், நடைமுறையில் இருக்கும் மொழிச் சட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்த தவறிவரும் தற்போதைய அரசாங்கம் எவ்வாறு தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் அதிகார பரவலாக்கலை வழங்கப்போகின்றது என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

மொழிப்பிரச்சினை என்பது தேசிய இனப்பிரச்சினை தீர்விற்கான ஒரு முன்னோடி எனவும் குறிப்பிட்டுள்ள அவர் தன்னை காட்சிக்காக அமைச்சராக வைத்திருப்பதற்கு ஒருபோதும் தயாரில்லையெனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அரண்மனை ஆட்சி இடம்பெற்றதாகவும், நாடாளுமன்றம், மற்றும் அமைச்சரவை ஆகியன பூனைக்குட்டிகளாக இருந்தாகவும் குறிப்பிட்டார்.

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சிக்காலத்தில் அப்போது ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த போது நான்கு அமைச்சு பதவிகளை சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து ஆட்சியைக் கைப்பற்றியது போல், ஜனாதிபதியும், பிரதமரும் நாட்டில் இல்லாத போது ஆட்சியை கைப்பற்றிவிடலாம் என சிலர் கனவு கண்டதாகத் தெரிவித்தார்.

எனினும் அது போன்ற ஒரு நிலைமை ஒருபோதும் ஏற்படாது என்றும் தெரிவித்த மனோ கணேசன்,  ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்து செயற்படுத்தும் நல்லாட்சி அரசாங்கமானது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு உரிய இடத்தை வழங்க வேண்டும் என குறிப்பிட்டார்.