தாக்குதல் சம்பவம் தொடர்பில் முழுமையாக நீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்-சுரேஷ்

283 0

இலங்கையில் நடைபெற்ற குண்டுத்தாக்குதல் சம்பவம் ஏன் நடைபெற்றது? எதற்காக நடைபெற்றது? பின்னணியில் உள்ளவர்கள் யார்? இனி நடைபெறாது எவ்வாறு தடுப்பது? என்பதை பற்றி ஆராயாது குறுகிய அரசியல் நோக்கத்ததுடன் அரசும், எதிர்க்கட்சியும் செயற்படுகின்றது. இது மிகவும் கேவலமான செயற்பாடு இதனால் நாட்டில் தேசிய பாதுகாப்பு மேலும் கேள்விக் குறியாகும் என ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் கடடபிராயில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டில் அண்மையில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றன. இதனால் பல உயிர்கள் காவு கொள்ளப்படடன. இந்த சம்பவத்தினை முழுமையாக ஆராயாது அரசும் எதிர்க்கட்சியில் உள்ள மகிந்த தரப்பும் தங்களின் குறுகிய அரசியல் தேவைக்காக பயன்படுத்தி வருகின்ற்னர்.

நாட்டில் நடைபெற்ற குண்டு தாக்குதல்கள் தொடர்பில் றிசாத் பதியுதீன் மீது குற்றம் சாட்டுவதற்கு முக்கிய காரணிகளும் இருக்கலாம். இந்த அரசினை இலகுவாக வீழ்த்த வேண்டுமானல் அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்றை கொண்டு வந்து அதனை நிறைவேற்றினால் அவருக்கு சார்பான பாராளுமனற உறுப்பினர்கள் அரசுக்கு வழங்கிய ஆதரவினை பின் வாங்குவார்கள்.

இதனால் அரசுக்கு பெரும்பான்மை இல்லாது போகும். அப்படியானால் அரசு கவிழும் இதற்காகவே எதிர்க்கடசியினர் பாடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அரசும் மகிந்த தரப்பும் அரசியல் நோக்கத்துடன் செயற்படுகின்றனரே தவிர உண்மயான குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் நோக்கமில்லை. இது நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் முழுமையாக நீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். இதில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் பாரபட்சம் இன்றி தண்டிக்கப்பட வேண்டும். தென்னிலங்கை அரசியல்வாதிகளும் இந்த சம்பவத்தினை வைத்து அரசியல் இலாபம் தேடாது நாட்டு மக்கள் நலனில் அக்கறை எடுத்து செயற்பட வேண்டும்.

நாட்டில் நடைபெற்ற குண்டு தாக்குதல்கள் காரணமாக ஏராளமான அப்பாவி மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன. எனவே இதனை உணர்ந்து அனைத்து தரப்பும் அக்கறையுடன் செயற்பட வேண்டும் என்றார்.