பதுளை லெஜர்வத்தை தோட்டத்தில் தொழிற்சங்க ரீதியாக தீர்க்க வேண்டிய பிரச்சினை ஒன்றினை இராணுவத்தினரைக் கொண்டு தொழிலாளர்களை அச்சுறுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதனால் அச்சமும் அதிருப்தியும் அடைந்ததாகத் தெரிவித்த தொழிலாளர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை டயர்களை எரித்தும் உருவ பொம்மை செய்து அதனை தாக்கியும் வீதியை மறித்தும் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்.
குறித்த தோட்டத்தில் மரங்கள் வெட்டப்படுவதாகவும் வெட்டிய மரங்களை புதிதாக அமைக்கப்பட்ட கொங்கிரீட் பாதையின் ஊடாக கொண்டு செல்வதால் பாதை பழுதடைவதாகவும் தொழிலாளர்களால் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பாதையை திருத்தும் பொருட்டு பிரதேச சபை உறுப்பினர் ஊடாக தொழிலாளர்கள் சிலரும் தோட்ட நிர்வாகத்துடன் சந்திப்புக்களை நடத்தியபோதிலும் தொழிலாளர்கள் சார்பிலான கோரிக்கைகள் செவிமெடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளையடுத்து இராணுவம் தோட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளது. இதன்போது தோட்ட தொழிலாளர்களுக்கு எதிராக தகாத வார்த்தைகளும் பிரயோகிக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர். இதனால் அச்சம் கொண்ட தோட்ட மக்கள் சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷின் கவனத்துக்கும் கொண்டு சென்றிருந்தனர்.
இந்நிலையிலேயே நேற்று செவ்வாய்க்கிழமை மேற்படி தோட்டத் தொழிலாளர்கள் ஒத்துழையாமை போராட்டத்தை முன்னெடுத்தனர். அத்துடன் தமது தரப்பிலிருந்து பல கோரிக்கைகளையும் விடுத்துள்ளனர்.
இந்த போராட்டத்தின்போது தொழிலாளிகளின் அடிமைத்தனம் இனியும் வேண்டாம்.¸ தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளைக் கொடு போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தொழிலாளர்கள் ஏந்தி நின்றனர்.
ஆர்ப்பாட்ட இடத்துக்கு வருகை தந்த பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் மக்களின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு அவரும் கோசங்களை எழுப்பியதைக் காணமுடிந்தது.
அத்துடன் சம்பந்தப்பட்ட தோட்ட கம்பனியின் உயர் அதிகாரிகளுடனும் பொலிஸ் அதிகாரிகளுடனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய இராஜாங்க அமைச்சர் மக்களுடனும் கலந்துரையாடினார்.
இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த வடிவேல் சுரேஷ்,
பெருந்தோட்ட காணிகள் அனைத்தும் அரசாங்கத்திற்கு சொந்தம். அரசாங்கத்திற்கு சொந்தம் என்றால் தோட்ட தொழிலாளர்களுக்கு சொந்தம். கம்பனிகள் வாடகைக்கே தோட்டங்களை பெற்றுள்ளன. அவர்களில் காலத்திற்கு காலம் வரும் அதிகாரிகள் தங்களுக்கு ஏற்றாற்போல் முறைக்கேடான செயற்பாடுகளை மேற்கொண்டு தோட்ட மக்களின் ஒற்றுமையையும் அபிவிருத்திகளையும் சீர்குலைத்து வருகின்றனர்.
இதனால் பாதிப்படைவது அப்பாவி தோட்ட தொழிலாளர்களே. பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் என்ற வகையிலும் தொழிற்சங்கவாதி என்ற வகையிலும் இதனை வன்மையாக கண்டிக்கின்றேன். தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு லெஜர்வத்தை தோட்ட பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று கூறினார்.

