ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிப் பெற்றால் அரசாங்கம் பலவீனமடையும் நம்பிக்கையில்லா பிரேரணையை அடிப்படையாகக் கொண்டே இம்முறை மக்கள் அரசியல் ரீதிலான தீர்மானங்களை மேற்கொள்வார்கள்.
அனைவருக்கும் இதுவொரு அரசியல் களப்பரிட்சையாக காணப்படும்.என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
இஸ்லாமிய அடிப்படைவாதத்துடன் தொடர்புப்பட்டுள்ளார் என்று குற்றச்சாட்டை மையப்படுத்தியே அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.குறித்த பிரேரணைக்கு ஐக்கிய தேசிய கட்சியினரும்,கூட்டமைப்பின் உறுப்பினர்களும் ஆதரவு வழங்குவதாக தமது தனிப்பட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள்.
கட்சி ரீதியில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் எவ்விதத்தில் மாற்றமடையும் என்று குறிப்பிட முடியாது.
ஐக்கிய தேசிய கட்சி தற்போது திரிசங்கு நிலையில் அகப்பட்டுள்ளது.
நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் 18- 19ம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. விவாதத்தின் போது எதிர்தரப்பினரால் சாட்டப்பட்ட 10 குற்றச்சாட்டுக்களம் தெளிவாக விபரிக்கப்படும்.பிரேரணை நிச்சயம் வெற்றிப் பெறும் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது.
ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் கட்சியின் தலைமைத்துவத்தின் அரசியல் சூழ்ச்சிக்கு அகப்படாமல் மனசாட்சிக்கு மதிப்பளித்து செயற்பட்டால் மக்களின் ஆதரவினை பெற்றுக் கொள்ளலாம்.
நம்பிக்கையில்லா பிரேணையினை ஆளும் தரப்பினரும், எதிர் தரப்பினரும் எவ்வாறு கையாளுவார்கள். எவர் ஆதரவாகவும், எதிராகவும் வாக்களிப்பார்கள் என்று பொது மக்கள் எதிர்ப்பார்ப்புடன் உள்ளார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டே மக்கள் அரசியல் ரீதியான தீர்மானங்களை முன்னெடுப்பார்கள். ஒவ்வொரு பிரதேசத்தில் இருந்து மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேச மக்களின் அரசியல் கருத்துக்களுக்கு மதிப்பளித்து அதற்கேற்பவே செயற்பட வேண்டும்.
இன்று பெரும்பாலான மக்கள் அமைச்சர ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிப் பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளார்கள் என அவர் தெரிவித்தார்.