பாடசாலைக்கு பாதுகாப்பு கருவிகளை வழங்குவது அவசியம் – பந்துல

278 0

ஈஸ்டர்  ஞாயிறு  தாக்குதல் இடம் பெற்று  ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில்  அரசாங்கம்  பாதுகாப்பு தொடர்பில் தூரநோக்கு திட்டங்களை வகுக்கவில்லை.

பாடசாலை மாணவர்களுக்கு  டெப்  மடிக்கணனி  வழங்குவதை விடுத்து, அனைத்து  பாடசாலைகளுக்கும்   பாதுகாப்பு கருவிகள்  வழங்குவது தற்போதைய  பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வஜிராஷ்ரம விகாரையில்  இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அடிப்படைவாதிகளின்  தாக்குதல் இடம் பெற்று  இன்றுடன்  ஒரு மாதத்தை கடந்துள்ள  நிலையில்  தேசிய பாதுகாப்பு  உறுதிப்பட்ட  நிலையில் மக்களும் தமது செயற்பாடுகளும் வழமைக்கு திரும்பியுள்ளன.

நாடு தழுவிய ரீதியில் உள்ள  அனைத்து  பாடசாலைகளுக்கும்  பாதுகாப்பு துறையினரால் பாதுகாப்பு  வழங்கும் போது பல   நெருக்கடிகள் ஏற்படும்.

சுற்றுலாத்துறையினை  மேம்படுதுவதற்கு அரசாங்கம்  சலுகைகளை  வழங்குவதாக குறிப்பிட்டது. ஆனால் இவ்விடயம் தொடர்பில் அரச  மற்றும் தனியார்  வங்கிகளுக்கு இதுரையில் எவ்வித சுற்று நிருபமும்  வெளியிடப்படவில்லை.

மறுபுறம் கடந்த ஒரு மாத காலமாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரணங்களை பெற்றுக் கொள்வதற்கான  எவ்வித வழிமுறைகளும் ஏற்படுத்தப்படவில்லை.

குண்டு தாக்குதலில் நேரடியாகவும்,மறைமுகமாகவும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கம்  உடடியாக  நிவாரணங்களை வழங்குவதற்கான  நடவடிக்கைகளை  மேற்கொள்ள வேண்டும்.

மக்களின்  குறைகளை கேட்பதற்கான   குறைகேள்  காரியாலயம்  24 மணித்தியாலமும் செயற்படும்  விதமாக   ஸ்தாபிக்கப்படுதல் வேண்டும்.

அமைச்சர் ரிஷாட்  பதியுதீனுக்கு எதிராக பாராளுன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள  நம்பிக்கையில்லா பிரேரணை  நிச்சயம் வெற்றிப் பெறும்.

இவருக்கு   வழங்கிய  வணிக கைத்தொழில் அமைச்சின் கீழ் அதிகாரம் வாய்ந்த மேலும் பல  அமைச்சுக்களும், திணைக்களங்களும் உட்படுத்தப்பட்டுள்ளது. கைத்தொழில் அமைச்சின் கீழ் உயர் கல்வி அமைச்சு  தற்போதே கொண்டு வரப்பட்டுள்ளது.

இவருக்கு இவ்வாறான  வரப்பிரசாதங்களை   அரசாங்கம்  வழங்கியமைக்கான காரணத்தையும் நம்பிக்கையில்லா பிரேரணை  விவாதத்தின் போது  நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். என்றார்.