வன்முறைகளுக்கு முடிவு கட்டுங்கள்!  மஸ்தானிடம் கண்ணீர் மல்க கோரிக்கை!

283 0

வன்முறைகளுக்கு முடிவு கட்டுங்கள் என பாதிப்புற்ற மக்கள்  மஸ்தானிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தின் நாத்தாண்டிய பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாத செயற்பாடுகளினால் பெரிதும் பாதிப்படைந்துள்ள கொட்டரமுல்லை, புஜ்ஜம்போல, தும்மோதர ஆகிய கிராமங்களுக்கும் குருநாகல் மாவட்டத்தின் ஹெட்டிபொல, கொட்டாம்பிடிய, மடிகே,  அனுகன, கினியம பகுதிகளுக்கும் நேற்று ஸ்தலத்திற்கு நேரடி விஜயம் மேற்கொண்ட புனர்வாழ்வு மீள் குடியேற்றம் வடக்கு அபிவிருத்தி முன்னாள் பிரதி அமைச்சரும் வன்னி மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினருமான  காதர் மஸ்தான் அழிவுகளை பார்வையிட்டதுடன் நடந்த துயரமான சம்பவங்களை கேட்டறிந்து கொண்டார்.

வீடுகள்,கடைகள், பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டு குர்-ஆன் பிரதிகள் எரிக்கப்பட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நிர்க்கதி நிலையில் அச்சத்துடன் வாழ்ந்து வரும் நிலையில் அவர்கள் தமக்கு ஏற்பட்ட துயரங்களை  கண்ணீர் மல்க  விளக்கிக் கூறியுள்ளனர்.

பாதுகாப்பு விடயத்தில் கூடிய கவனம் செலுத்துமாறும் காலத்துக்கு காலம் புனித ரமழானில் காடையர்கள் கட்டவிழ்க்கும் வன்முறைக்கு ஒரு முடிவு காணுமாறும், தமக்கேற்பட்ட இழப்புகளுக்கு நஷ்டஈடு வழங்குமாறும் அவர்கள் வேண்டிக்கொண்டனர்.

 

விடயங்களை வேதனையுடன் செவிமடுத்த  பாராளுமன்ற உறுப்பினர்  காதர் மஸ்தான் அனைத்து விஷயங்களையும் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவருவதாக உறுதியளித்துடன் நஷ்டஈடுகளை துரிதமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

காதர் மஸ்தாவுடன் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்  பிரசன்னமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.