என் மீது அபாண்டமான பழி சுமத்தப்படுகிறது -ஹிஸ்புல்லாஹ்

220 0

கடந்த வாரம் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து குண்டு வெடிப்பின் சூத்திரதாரி எனக் கருதப்படும் நபருடன் தன்னைத் தொடர்புபடுத்தி தன்மீது மிக மோசமாக, அபாண்டமாகப் பழிசுமத்தி தன்னுடைய நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் எழுதி வருவதை அவதானித்து தான் விசனமடைவதாக கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வியாழக்கிழமை (25) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற  பாராளுமன்றத் தேர்தலில் நான் வேட்பாளராக இருந்தபோது சகல வேட்பாளர்களும் அழைக்கப்பட்ட கலந்துரையாடலில் நானும் பங்குபற்றியிருந்தேன்.

ஒரு வேட்பாளர் என்ற அடிப்படையில் நானும் கலந்து கொண்டேன்.  அந்தத் தேர்தலில் போட்டியிட்ட ஏனைய சகல வேட்பாளர்களும் அதில் பங்குபற்றிக் கலந்துரையாடினார்கள். அவ்வாறன கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்துக் கொண்டு இன்று என் மீது பழிசுமத்துவதற்காக ஊடகங்கள் பிரசுரித்து எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முனைகின்றனர்.

மேலும் குண்டு வெடிப்பின் சூத்திரதாரியும் அவரின் இயக்கமும் என்னுடைய அரசியலில் எனக்கு ஒரு போதும் ஆதரவு வழங்கியதும் கிடையாது எனக்காகப் பணியாற்றியதும் கிடையாது என்பதை சொல்லி வைக்க விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.