வவுனியாவில் இராணுவம் மற்றும் பொலிஸார் சுற்றிவளைப்பு தேடுதல்

413 0

வவுனியாவில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவமும் பொலிஸாரும் சேர்ந்து சுற்றிவளைப்பு தேடுதலை இன்று காலை மேற்கொண்டனர்.

வவுனியா பட்டானிச்சூர் மற்றும் சாளம்பைக்குளம் பகுதிகளிலேயே இவ்வாறு அதிகளவான பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டுள்ளதுடன் வீதியால் செல்லும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களும் நிறுத்தி சோதனை செய்யப்பட்டிருந்தது.

கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் முக்கிய இடங்களான வைத்தியசாலை, பஸ் நிலையம், மதஸ்தளங்கள் என்பற்றில் கடந்த சில தினங்களாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொதிகளுடன் வருபவர்களிடம் சோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந் நிலையிலேயே இன்று வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் அதிகாலை 4 மணியில் இருந்து 8 மணிவரை இராணுவத்தினரும் பொலிஸாரும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

எனினும் சந்தேகத்துக்கிடமாக எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.