முதல்வராகும் நோக்கில் காய் நகர்த்தும் சசிகலா

328 0

sasi-with-j-1தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக கடந்த மாதம் 22ஆம் திகதி அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

முதலமைச்சர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 20 நாட்கள் கடந்துள்ள நிலையில், முதலமைச்சர் குறித்த வதந்திகளும் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே செல்கின்றது.  இந்நிலையில், தமிழகத்தின் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக ஒரு தரப்பினர் குற்றச்சாட்டு முன்வைக்க, மறுபுறத்தில் ஜெயலலிதாவுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டமை தொடர்பிலும் பலவிதமான சந்தேகங்கள் வெளியிடப்படுகின்றன.

இவ்வாறான பரபரப்பான சூழ்நிலையில் தற்போது தற்காலிக முதல்வராக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவிக்கப்பட்டு முதல்வர் ஜெயலலிதா வசம் உள்ள உள்துறை உள்ளிட்ட பணிகளும் அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.எனினும், தமிழக அரசியல் இவ்வாறு சென்று கொண்டிருக்க, முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருக்கமான தோழி சசிகலா நடராஜன் நேரடி அரசியலில் களமிறங்க இருப்பதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தஞ்சாவூர் தேர்தல் தொகுதியில் சசிகலா நடராஜன் போட்டியிடக் கூடும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.கடந்த தமிழக சட்டசபை தேர்தலின் போது பணப்பட்டுவாடா முறைப்பாட்டையடுத்து தஞ்சாவூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்னமும் இத்தொகுதிக்கான தேர்தல் திகதி அறிவிக்கப்படவில்லை.

மேலும், தமிழக முதலமைச்சர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் பொறுப்பு முதல்வர் அல்லது அரசாங்கத்தை வழிநடத்துபவர் யார்..? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.இவ்வாறான நிலையில், அ.தி.மு.கவில் ஒருசிலர் சசிகலா நடராஜனே தலைமை வகிக்க வேண்டும் என குரல்கள் கொடுத்தும் வரும் நிலையில் சசிகலா நடராஜன் நேரடி அரசியலில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர், அரசியல் சாசனத்துக்கு அப்பாற்பட்ட சக்திகள் ஆட்சி நடத்தக் கூடாது என்ற சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.அத்துடன், சசிகலாவை அ.தி.மு.க துணைப் பொதுச்செயலராக அறிவித்து அவரை தஞ்சாவூர் தேர்தல் தொகுதியில் போட்டியிட வைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சசிகலாவை தவிர்த்து வேறு ஒருவர் கைகளுக்கும் கட்சி மற்றும் ஆட்சி என்பன போவதை அவரது கணவர் நடராஜன் விரும்பவில்லை என கூறப்படுகின்றது.இதன் காரணமாகவே, சசிகலாவை அரசியல் களத்தில் இறக்கி அ.தி.மு.கவையும் ஆட்சியையும் கைப்பற்றுவது என தீர்மானித்துள்ளதாகவும், அதற்கான காய்நகர்தல்களை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.இதேவேளை, முதலமைச்சர் ஜெயலலிதாவின் பின்னணில் சதி நடவடிக்கையில் சசிகலா நடராஜன் ஈடுபட்டுள்ளதாக ராஜ்யசபா எம்.பியும், சமீபத்தில் அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.