வாகனங்களில் கட்சிக்கொடி கட்ட அனுமதி இல்லை- போக்குவரத்துத்துறை

282 0

அரசியல் கட்சியில் உள்ளவர்கள், தங்களது வாகனங்களில் கட்சிக் கொடி கட்டிக்கொள்வது உள்ளிட்ட செயல்களுக்கு மோட்டர் வாகன சட்டப்படி அனுமதி இல்லை என்று போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. 

சாலைகளை முறையாகப் பராமரிக்கக் கோரி மதுரையை சேர்ந்த வக்கீல் ஸ்டாலின், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். விபத்துகள் அதிகரித்து வருவதால், சாலை விதிகளை பின்பற்றாத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தனது மனுவில் கூறியிருந்தார். 

இந்த வழக்கை நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, “அரசியல் கட்சியினர் தங்களின் வாகனங்களில் கட்சிக்கொடி கட்டிக்கொள்வது, தலைவர்களின் படங்களை வைத்து கொள்வது, தங்களது பதவிகளை வாகனங்களில் பெரிதாக எழுதிக்கொள்வது போன்றவைகளை செய்யாமல் இருந்தாலே பெரும்பாலான விபத்துகள் தடுக்கப்படும்.

இதுபோன்ற செயல்களுக்கு மோட்டார் வாகன சட்டப்படி அனுமதி உள்ளதா?, இந்த நடவடிக்கைகளுக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பின்னர், இதுகுறித்து தமிழக உள்துறை செயலாளர், போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  போக்குவரத்துத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசியல் கட்சியில் உள்ளவர்கள், தங்களது வாகனங்களில் கட்சிக் கொடி கட்டிக்கொள்வது உள்ளிட்ட செயல்களுக்கு மோட்டர் வாகன சட்டப்படி எவ்வித அனுமதியும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. தலைவர்களின் படங்களை வைத்துக்கொள்ளவும், தங்களது பதவிகளை வாகனங்களில் பெரிதாக எழுதி கொள்ளவும் அனுமதி இல்லை என்றும் போக்குவரத்துத்துறை கூறியுள்ளது.

இதையடுத்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.