வங்கக் கடலில் 29ம் தேதி புயல் உருவாகும்- சென்னை வானிலை மையம் தகவல்

254 0

வங்கக் கடலில் 29-ம் தேதி புயல் உருவாகும் என்றும், இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் பரவலாக கோடை மழை பெய்து வரும் நிலையில், சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஆத்தூரில் 10 செமீ மழை பெய்துள்ளது. பெரியகுளம், மேட்டூர், திருவண்ணாமலை, ஓசூர், தம்மம்பட்டி, தேனி மாவட்டம் கூடலூர் ஆகிய இடங்களில் தலா 5 செமீ மழை பதிவாகி உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும், இந்திய பெருங்கடல்- தென்மேற்கு வங்கக் கடலில் வரும் 25ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளது. இது 27-ம்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். பின்னர் மேலும் வலுப்பெற்று 29-ம் தேதி புயலாக மாறி தமிழகத்தை நோக்கி நகரும். 

இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 29-ம் தேதி முதல் கனமழை பெய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.