அதிகாரிகளுக்கு கட்டளை வழங்கிய கோட்டாபயவே பொறுப்பு கூற வேண்டும்- ஸ்கொட் கில்மோர்

176 0

இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கட்டளை வழங்கியவர் என்ற ரீதியில் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே முழுமையாக பொறுப்புக்கூற வேண்டியவரென அனைத்துலக சட்ட நிபுணர் ஸ்கொட் கில்மோர் தெரிவித்துள்ளார்.

கலிபோர்னியா மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக கனடாவைச் சேர்ந்த றோய் சமாதானம் என்பவர், மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், நான் கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டேன்.

அத்துடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த இடத்தை கோட்டாபய ராஜபக்ச அறிந்திருந்ததுடன் அவர்களுடனும் தொலைபேசியில் உரையாடியதை கேட்டிருக்கின்றேன்.

அந்தவகையில் தன்னை தடுத்து வைத்து சித்திரவதைக்கு உட்படுத்தியமைக்கு இலங்கை அரசு அதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என றோய் சமாதானம் குறித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சிவில் வழக்கை சட்ட நிபுணர் ஸ்கொட் கில்மோர் கையாளவுள்ள நிலையிலேயே, கோட்டாபய அனைத்துலக சட்டங்களுக்கு அமைய குறித்த விவகாரத்தில் பொறுப்புக் கூற வேண்டியவரென அவர் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.