கிறிஸ்தவ மத நிகழ்வு ஒன்றுக்கு யாழ்ப்பாணப் பொலிஸார் தடை!

210 0

யாழ்ப்பாணம் மாநகரசபை மைதானத்தில் நடைபெறவிருந்த கிறிஸ்தவ மத நிகழ்வு ஒன்றுக்கு யாழ்ப்பாணப் பொலிஸார் தடை விதித்துள்ளனர்.

இன்றிலிருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவிருந்த மத நிகழ்வுக்கே பொலிஸார் இவ்வாறு தடை விதித்துள்ளனர்.

சிவபெருமான் மற்றும் புத்தர் ஆகியோரை குறித்த மத நிகழ்வை ஏற்பாடு செய்யும் குழுவினர் சாத்தான்கள் என்று கூறியதனாலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இதுதொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் முறைப்பாடு செய்ததையடுத்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

குறித்த முறைப்பாட்டில், சில தினங்களுக்கு முன்னர் கிளி நொச்சியில் குறித்த குழுவினர் மத நிகழ்வொன்றை நடத்தியதாகவும் அதன்போது சிவனையும் புத்தரையும் சாத்தான்கள் என்று கூறியதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இதற்கான வீடியோ ஆதாரமொன்றும் யாழ் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஏனைய மதத்தவர்களை ஆத்திரமூட்டியுள்ளதாகவும் எனவே இதற்கு யாழ்ப்பாணத்தில் அனுமதி வழங்கப்படக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் குறித்த மத நிகழ்வை முன்னின்று நடத்தும் மூன்றுபேர் இந்தியாவிலிருந்து வருகை தந்தவர்கள் என்று தெரியவருகிறது.

இதேவேளை இந்த நிகழ்வு எதிர்வரும் 29ஆம் நாள் கிழக்கு மாகாணத்திலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.