மாற்று கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளரை ஏற்கப் போவதில்லை – ரஞ்சித்

231 0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் முன் நிறுத்தும் ஜனாதிபதி வேட்பாளரை ஏற்கப் போவதில்லை என பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவிக்கையில், “அடுத்து ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடுகின்றமை இன்னும் உறுதியாகவில்லை.

எமது கட்சி சுபநேரத்தில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை தீர்மானிக்கும். எமது வேட்பாளர் தெரிவாகியிருந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு அவர்களின் வேட்பாளர் யார் என்பதை கூற முடியாதுள்ளது.

மைத்திரிபால சிறிசேனவும் இரண்டாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதாக எங்கும் கூறவில்லை. எனவே அவர் போட்டியிடமாட்டார் என நான் கருதுகின்றேன்.

52 நாட்கள் அரசியல் குழப்பத்திற்கு மத்தியில் அரசாங்கத்தின் பின்னால் சென்றமை தவறு என ஏற்றுக்கொள்கின்றோம். வரவு செலவு திட்ட வாக்கெடுப்பின் போது எதிராக வாக்களிக்க நாம் முடிவு செய்தோம் அதனையே செய்து காட்டினோம்.

இனிமேலும் எவருடைய பேச்சையும் நம்பி ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய போவதில்லை. எனவே பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தில் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வது உறுதி. இதில் எவருடனும் சமரசம் இருக்க போவது இல்லை” என கூறினார்.