தமிழீழ தேசத்தின் மாவீரர் விபரத்திரட்டல் இணையத்தளம்.

496 0

4.4.2019

எங்கள் உயிரினும் மேலானது எம் தாய்நிலமாம் தமிழீழம். இதனை மீட்டெடுக்கும் உன்னத விடுதலைப்போரில் தம்முயிரைக் கொடையாக்கிச் சென்றவர்கள் மாவீரர்கள். கல்லறைக் கடவுளராய், கண்ணின் மணிகளாய், காவல் தெய்வங்களாய், கார்த்திகை மலர்களாய் எம்முள் நிறைந்திருப்பவர்கள் எம் மான மாவீரர்கள். இவர்களின் வீரத்தையும், ஈகத்தையும் போற்றிநிற்பது எமது பண்பாடாக விரிந்து நிற்கின்றது.

இவர்களின் வாழ்வும், வரலாறும், உயிர்க்கொடையும் இந்த உலகம் உள்ளவரை நிலைத்திருக்கவேண்டியவை. இவர்களின் வீரவரலாறு எம்மோடு அழிந்துவிடக்கூடாது. இது அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் கொண்டுசெல்லப்படவேண்டியது என்பது ஒவ்வொரு தமிழனுக்கும் உரிய தலையாய கடமையாகும்.
இந்த வரலாற்றக் கடமையை நெஞ்சகத்திலிருத்தி, மாவீரர்களின் ஒப்பற்ற வீர வரலாறுகளைத் தொகுத்து ஆவணப்படுத்தி பாதுகாக்கவேண்டியவர்களாக நாம் உள்ளோம். அதேவேளை, இவற்றை மாவீரர் பெட்டகங்களாக வடிவமைத்து வெளியிடும் மகத்தான பணியினையும் நாம் ஏற்றுள்ளோம்.

இவ்வகையில் எம்மால் 2015ஆம் ஆண்டிலிருந்து முதற்கட்ட முயற்சியாக உருவாக்கப்பட்டு 2018ஆம் ஆண்டு மாவீரர் நாளில் வெளியிடப்பட்ட 27.11.1982 முதல் 31.12.1995 வரையான காலப்பகுதிக்கு உட்பட்ட மாவீரர் பெட்டகத்தின் முதல் தொகுதியில் சீர்செய்யப்பட வேண்டியவற்றிலும், இனி வெளிவரவிருக்கும் பெட்டகத்தில் இடம்பெறவுள்ள தகவல்கள் அனைத்தும் உண்மையானவையாக இருக்கவேண்டும் என்பதிலும் நாம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். இந்த வரலாற்றுக் கடமையை செவ்வனே ஆற்ற உறுதியெடுத்துள்ளோம்.


இதற்காக 1982 ஆம் ஆண்டு தாயகத்தின் விடிவுக்காக தன்னுயிரை அர்ப்பணித்த முதல் மாவீரர் லெப். சங்கர் தொடக்கம், 2009 மே மாதம் 18 ஆம் நாள் வரை வீரவரலாறான மாவீரர்களின் விபரங்களை நாம் திரட்டுவதற்கு எண்ணியுள்ளோம்.
இக்காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் மாவீரர்களாக அறிவிக்கப்பட்டவர்களும், இதுவரை மாவீரர்கள் பட்டியலில் இணைக்கப்படாதவர்களும், தொடர்பிழந்து இருப்பவர்களும் என வகைப்படுத்தி, எம் பணிகளை இலகுபடுத்தவுள்ளோம்.

இத்தகைய எண்ணங்களுக்கும், இலட்சிய நோக்கத்திற்காகவும் www.maveerarpeddakam.com என்ற இந்த இணையத்தளத்தை நாம் விபரத்திரட்டலுக்காக மட்டும் உருவாக்கி, ஆனந்தபுரம் பெரும்சமரில் வீரகாவியமான அனைத்து மாவீரர்களின் 10ஆம் ஆண்டு நினைவு நாளில் அனைத்துலக மாவீரர் பணிமனை ஊடாக வெளிப்படுத்தி நிற்கின்றோம்.
அன்பான தமிழின உறவுகளே!

எம் வீர மறவர்களின் வரலாற்றினை நேர்த்தியான முறையில் உருவாக்குவதற்கு மாவீரர் குடும்பங்கள், உறவுகள், போராளிகள், நண்பர்கள் மற்றும் மாவீரர்கள் விபரங்களை வைத்திருப்போர் அனைவரும் ஒன்றிணைந்து விபரங்களைத் திரட்டுவதற்கு பங்களிக்க வேண்டுவதோடு இவ் இணையத்தில் விரைவாக விபரங்களைப் பதிவேற்றம் செய்யுமாறு அன்புரிமையோடு வேண்டிநிற்கின்றோம்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.

அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.