“தூத்துக்குடிக்கு புல்லட் ரெயில் கொண்டு வருவோம்” கனிமொழிக்கு தமிழிசை பதிலடி

318 0

“தூத்துக்குடிக்கு புல்லட் ரெயில் நிச்சயமாக கொண்டு வருவோம்” என்று கனிமொழிக்கு தமிழிசை பதிலடி கொடுத்தார்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று காலையில் ஓட்டப்பிடாரம் பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று பிரசாரம் செய்தார். அவர் காலை 10 மணிக்கு ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஓனமாகுளத்தில் தனது பிரசாரத்தை தொடங்கினார். பிரசாரத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கினார்.

பிரசாரத்தின்போது தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது அவர்கள் எதையும் செய்யவில்லை. தூத்துக்குடி மக்களுக்கு புல்லட் ரெயில் வேண்டாம் என்று சொல்கிறார் கனிமொழி. அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்று நிச்சயமாக தூத்துக்குடிக்கு புல்லட் ரெயில் கொண்டு வருவோம்.

இந்த பகுதி மக்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் இங்கு போட்டியிடுகிறோம். தாமரை சின்னத்தில் வாக்களிப்பதன் மூலம் ஒரு நல்ல நாடாளுமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுங்கள். உங்கள் மீது அக்கறை உள்ள நாடாளுமன்ற உறுப்பினராக நான் இருப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் தோல்வி பயத்தில் தூத்துக்குடிக்கு புல்லட் ரெயில் கொண்டு வருவதாக கூறியதாக கனிமொழி தெரிவித்து உள்ளார். எனக்கு பயம் கிடையாது. தோல்வி பயமும் கிடையாது. தூத்துக்குடிக்கு குடிநீர் தேவை முக்கியம். அதனை முதலில் கொடுங்கள் என்று கனிமொழி தெரிவித்து உள்ளார். தூத்துக்குடி மக்களுக்கு குடிநீர் தேவைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்து உள்ளதை அவர் முதலில் அறிய வேண்டும். தி.மு.க., காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது தூத்துக்குடி மீது இல்லாத அக்கறை தற்போது கனிமொழிக்கு ஏன்? இவ்வாறு அவர் கூறினார்.