கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறவே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை

297 0

201610091318223055_seeman-interview-bjp-wins-karnataka-assembly-elections-are_secvpfகர்நாடகாவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறவே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை என்று திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது சீமான் கூறினார்.உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுத்த மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். இதில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது.

கட்சி நிர்வாகிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது:-பல சட்ட போராட்டங்களுக்கு பிறகு குறிப்பிட்ட காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு மறுத்தது. இது தமிழர்களுக்கு மத்திய அரசு செய்த பச்சை துரோகம்.

கர்நாடகாவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் பேச்சுக்கு எப்போதும் எதிர்ப்பு தெரிவித்து வரும் சோனியா காந்தியும், ராகுல்காந்தியும் காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை.

வாக்குகளுக்காக நிற்கிற கட்சிகளாக தற்போது பா. ஜனதாவும், காங்கிரசும் உள்ளது. கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டபோது, பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைமையும் குரல் கொடுக்கவில்லை. அப்படியானால் கர்நாடக மக்களின் நலன்சார்ந்து மத்திய அரசு இயங்குகிறதா?. மோடியும், காங்கிரஸ் தலைமையும் கர்நாடகத்திற்கு சாதகமாக செயல்படுகிறார்கள். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

காவிரி தண்ணீரை தமிழகத்துக்கு கொடுக்க வேண்டும். அப்படி தர மறுத்தால் தமிழ்த்தேசியம் பேச வேண்டிய நிலை வரும். தமிழகத்தில் உள்ள வளங்கள் அனைத்தும் தமிழ்நாட்டுக்கே சொந்தம் என்று கூற வேண்டிய நிலை ஏற்படும்.

காவிரி விவகாரத்துக்காக தமிழக எம்.பி.க்கள் பதவி விலக வேண்டும் என்பது தேவையற்றது. தமிழர் நலன் சாராத பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்ற முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். இதேபோல் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகள் சொல்வார்களா?. தமிழகத்துக்கு தற்காலிக முதல்-அமைச்சரை நியமிக்க வேண்டுமா? என்பதை அ.தி.மு.க.தான் முடிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.