மோட்டார் வாகன பதிவு திணைக்களம் குறித்து மக்கள் மத்தியில் நல்லெண்ணம் இல்லை – மஹிந்த

262 0

மோட்டார் வாகன பதிவு திணைக்களம் தொடர்பாக மக்கள் மத்தியில் நல்லெண்ணம் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினரும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொரடாவுமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் துறைமுகங்கள், கப்பற்துறை அலுவல்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் இன்று இடம்பெற்றது.
இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நாரஹேன்பிட்டியில் அமைந்திருக்கும் மோட்டார் வாகன பதிவு திணைக்களத்தில் சாதாரண மனிதன் கூட சிறிய சேவையையேனும் பணம் கொடுக்காமல் செய்துகொள்ள முடியாத நிலையே காணப்படுகின்றது.

நாரஹேன்பிட்டியில் அமைந்திருக்கும் மோட்டார் வாகன பதிவு திணைக்களம் தொடர்பாக மக்கள் மத்தியில் நல்லெண்ணம் இல்லை. அங்கு சென்றுவரும் அனைவரும் அதிகாரிகளின் சேவை குறித்து குறையே தெரிவிக்கின்றனர். சாதாரண மனிதன்கூட சிறிய சேவையையேனும் பணம் கொடுக்காமல் செய்துகொள்ள முடியாத நிலையே அங்கு இருக்கின்றது.

அத்துடன் மோட்டார் வாகன பதிவு திணைக்களம் தொடர்பாக மக்கள் மத்தியில் இருக்கும் இந்த தப்பான எண்ணம் இன்று நேற்று வந்ததல்ல. ஆரம்ப காலம் முதல் இருந்து வருகின்றது.

என்றாலும் இந்த குற்றச்சாட்டு அரசாங்கத்துக்கும் அமைச்சருக்கும் நல்லதில்லை. அதனால் இதுதொடர்பாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் கூடிய அவதானம் செலுத்தவேண்டும்’ என தெரிவித்துள்ளார்.