அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாச படங்களை நீக்க ‘பேஸ்புக்’ அதிரடி நடவடிக்கை

252 0

ஆபாச படங்களை நீக்க ‘ஏ.ஐ.’ என்று அழைக்கப்படுகிற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த ‘பேஸ்புக்’ நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

‘பேஸ்புக்’ சமூக வலைத்தளங்களில் சம்பந்தப்பட்ட நபர்களின் அனுமதியின்றி அவர்களது ஆபாச படங்கள், தகவல்கள், வீடியோக்கள் பகிரப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இவற்றையெல்லாம் அந்த சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். இதற்காக ‘ஏ.ஐ.’ என்று அழைக்கப்படுகிற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த ‘பேஸ்புக்’ நிறுவனம் முடிவு எடுத்துள்ளது.

இதுபற்றி அந்த நிறுவனத்தின் உலக பாதுகாப்பு பிரிவின் தலைவர் ஆன்டிகான் டேவிஸ் கூறியதாவது:-

‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் (சம்பந்தப்பட்டவர்களின்) எந்தவித அனுமதியும் இன்றி ஆபாச படங்கள், வீடியோக்களை பகிர்ந்து கொள்கிறார்கள். இவற்றை நீக்குவதற்கு புதிய தொழில் நுட்பங்கள் உதவும்.

அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, எங்கள் வலைத்தளத்தில் பகிர்ந்துகொள்ளப்படுகிற ஆபாச படங்கள், வீடியோக்கள் பற்றி புகார்கள் வருமுன்னரே மனித மதிப்பீட்டாளர்களின் மதிப்பீட்டுக்கு அனுப்பப்படும். யாரோ சிலரின் நெருக்கமான காட்சிகளை கொண்ட படங்களை வெளியிடுகிறபோது அது பேராபத்தை ஏற்படுத்தி விடுகிறது. எனவே அவற்றை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீக்குவோம். முதலில் இதை சோதனைரீதியில் பயன்படுத்தி விட்டு, பின்னர் நெருக்கடி நேரத்தில் பயன்படுத்தத்தக்கதாக விரிவுபடுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.