ஆசிரியரின் தாக்குதலுக்குள்ளாகி 18 மாணவர்கள் வைத்தியசாலையில்!

267 0

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பூநொச்சிமுனை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவரினால் தாக்குதலுக்குள்ளான 18 மாணவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். 

நேற்று (13) இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கின்ற மாணவர்கள் மீதோ குறித்த வகுப்பாசிரியர் இவ்வாறு மிக கடுமையாக தாக்குதல் நடாத்தியுள்ளார். 

கையினாலும் தடியினாலும் மிகவும் கடுமையாக தம்மை தாக்கியதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட 18 மாணவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

பாடசாலையின் ஏனைய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் உதவியுடன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு வருகை தந்த மாணவர்களை, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் அவர்களுக்கான ஆரம்பக்கப்பட்ட சிகிச்சைகளையும் மேற்கொண்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. 

மாணவர்களை தாக்கிய குறித்த ஆசிரியரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். 

இதேவேளை குறித்த ஆசிரியர் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பே இப்பாடசாலைக்கு கடமைக்காக வந்ததாகவும் இவர் மட்டக்களப்பைச் சேர்ந்த ஆசிரியர் எனவும் இவருடைய நடவடிக்கை மோசமாக காணப்பட்டதால் இவரை இடமாற்றுமாறு பல முறை அதிகாரிகளை கேட்டதாகவும் குறித்த பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.