வங்காளதேசத்தில் விமான நிலையத்தில் கொசு தொல்லை!

288 0

வங்காளதேசத்தில் விமான நிலையத்தில் கொசு தொல்லை அதிகம் இருப்பதாக டாக்கா ஐகோர்ட்டில் தன்வீர் அகமது என்கிற வக்கீல் வழக்கு தொடர்ந்துள்ளார். 

வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் ஷாஜலால் சர்வதேச விமான நிலையம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 கோடி வெளிநாட்டு பயணிகள் இந்த விமான நிலையத்துக்கு வந்து செல்கிறார்கள். இந்த விமான நிலையத்தில் கொசு தொல்லை அதிகம் இருப்பதாக பயணிகள் தொடர்ந்து குற்றம் சாட்டுகின்றனர். இது பற்றி உள்ளூர் ஊடகங்களில் பரவலாக செய்திகள் வெளியாகின. 

இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக தன்வீர் அகமது என்கிற வக்கீல் டாக்கா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 2 நீதிபதிகளை கொண்ட அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த விவகாரம் தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி விமான போக்குவரத்து மற்றும் சுற்றுலா துறை செயலாளர் மற்றும் டாக்கா நகர மேயர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டனர். முன்னதாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காணாத அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்த நீதிபதிகள், சர்வதேச விமான நிலையத்தில் கொசு தொல்லை இருப்பதாக கூறப்படுவது நாட்டின் மதிப்பை களங்கப்படுத்துகிறது என வேதனை தெரிவித்தனர்.