வெனிசூலா எல்லையில் கலவரம் – 2 பேர் பலி!

380 0

வெனிசூலா எல்லையில் நிகழ்ந்த கலவரத்தில் 14 வயது சிறுவன் உள்பட 2 பேர் உயிர் இழந்தனர். மேலும் 300-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். 

வெனிசூலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அரசியல் குழப்பமும் தொடர்ந்து நீடிக்கிறது. வெனிசூலாவின் இடைக்கால அதிபராக தன்னை அறிவித்துக்கொண்ட ஜூவான் குவைடோக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்ததால், அந்த நாடுகளிடம் இருந்து மனிதாபிமான உதவிகளை பெற அதிபர் நிகோலஸ் மதுரோ மறுக்கிறார்.

உதவி பொருட்களை கொண்டு வரும் வாகனங்கள் வெனிசூலாவுக்குள் நுழையாத படி நாட்டின் எல்லைகளை அவர் மூடி வருகிறார். அந்த வகையில் பிரேசில் மற்றும் கொலம்பியா நாடுகளுடனான எல்லையை இரு தினங்களுக்கு முன்பு மூடினார்.

ஆனால் உணவு மற்றும் மருந்து பொருட்கள் கொண்ட உதவி பொருட்களை பெற எல்லையைத் தாண்டும் முயற்சியில் வெனிசூலா மக்கள் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு, ரப்பர் குண்டுகளால் சுட்டனர்.

இதனால் அங்கு கலவரம் வெடித்தது. இதையடுத்து பாதுகாப்புபடையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிகிறது. இதில் 14 வயது சிறுவன் உள்பட 2 பேர் உயிர் இழந்தனர். மேலும் 300-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.

இதனால் எல்லையோர நகரங்களில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.