கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு பூரண ஒத்துழைப்பை வழங்கும்-அடைக்கலநாதன்

242 0

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எதிர் வரும் திங்கட்கிழமை (25) கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு பூரண ஒத்துழைப்பை வழங்கும்.

அத்தோடு, வடக்கு-கிழக்கில் உள்ள வர்த்தகர்களும்,பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்களும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்விடையம் தொடர்பாக அவர் இன்று (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,

வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்ச்சியாக காணாமல் போன தமது உறவுகளை கண்டு பிடித்து தரக்கோரி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆனால் அரசு இன்று வரை எவ்வித முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை.

ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள போதும் இலங்கை அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வடக்கு கிழக்கில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் போராட்டம் இரண்டு வருடங்களை கடக்கின்றது.

எனவே காணாமல் போனவர்களின் உறவுகள் எதிர் வரும் திங்கட்கிழமை கிளிநொச்சியில் முன்னெடுக்கவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அனைவரும் வலுசேர்க்க வேண்டும்.

வடக்கு கிழக்கில் வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடியும்,பொது மக்களும் இணைந்து குறித்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்.

எனவே குறித்த போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.