பதினேழு வயது நிரம்பிய யுவதியை கர்ப்பவதியாக்கிய 57 வயதுடைய நபர் கைது

181 0

பதினேழு வயது நிரம்பிய யுவதியை கொலை செய்வதாகப் பயமுறுத்தி கர்ப்பவதியாக்கிய 57 வயதுடைய நபரைக் கைது செய்ததுள்ளனர்.

இவ்வாறு கைது செய்த நபரை பொலிசார்  பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ததும் நீதிபதி எதிர்வரும் 27ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

பதுளைப் பகுதியைச் சேர்ந்த தல்தென என்ற இடத்தில் வசித்து வந்த 57 வயதுடைய நபரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந் நபர் ஏற்கனவே சட்டப்பூர்வமான நிலையில் திருமணம் செய்து அப் பெண்ணுடன் வாழ்ந்து வருகின்றார். 

அவ் வேளையில் பிறிதொரு 16 வயதுடைய யுவதி மீது பாலியல் வல்லுறவினை மேற்கொண்டதன் விளைவாக யுவதி வழக்குத் தொடர்ந்ததார். பதுளை மேல் நீதிமன்றத்தில் அது தொடர்பான வழக்கு விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையிலேயே மீளவும் 17 வயதுடைய யுவதியை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாகக் கூறி அவர் மீது தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவினை மேற்கொண்டிருந்தார்.

அவ் யுவதி கர்ப்பவதியாகியதும் அவ் யுவதி தமது பெற்றோருடன் சென்று பதுளைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

பொலிசார்  யுவதியை வைத்திய பரிசோதனைக்கு பதுளை அரசினர் வைத்தியசாலையில் அனுமதித்த போது குறித்த யுவதி மருத்துவமனையில் ஆண் குழந்தையொன்றை பிரசவித்தாள்.

தாயும, சேயும் நலமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

பதுளைப் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து குறிப்பிட்ட நபரைக் கைது செய்ய பொலிசார் சென்ற வேளையில் அந் நபர் பிறிதொரு பெண்ணின் வீட்டில் கட்டிலுக்கடியில் மறைந்திருந்த நிலையில் அந்நபர் கைது செய்யப்பட்டார்.

இந் நபர் பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் செய்ததும் நீதிபதி 27ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன், பதுளை அரசினர் வைத்தியசாலையில் பிரசவமான குழந்தை இந்நபருடையதா என்று அறிய டி.என்.ஏ. பரிசோதனை செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.