கேரளக் கஞ்சாவுடன் இருவர் கைது

310 0

கற்பிட்டி, கண்டல்குழி ஈச்சன்காடு கடற்கரை பிரதேசத்தில் படகு மூலம் கொண்டுவரப்பட்ட ஒருதொகை கேரளக் கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் இருவர் இன்று (18) அதிகாலை 3 மணிக்கு கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கற்பிட்டி கண்டல்குழி பகுதியைச் சேர்ந்த 49 மற்றும் 53 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இன்று (18) அதிகாலை 3 மணியளவில் பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில், குறித்த பிரதேசத்தில் விஷேட சுற்றிவளைப்பை மேற்கொண்ட போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து படகு ஒன்றின் மூலம் கொண்டுவரப்பட்டதாக ௯றப்படும் 20 கிலோ 35 கிராம் நிறையுடைய கேரளக் கஞ்சா மற்றும் இயந்திர படகு என்பன மீட்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

குறித்த கேரளக் கஞ்சா இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதேவேளை, சந்தேக நபர்கள் இருவரும், விசாரணைகளின் பின்னர் நாளை (19) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.