ஆலங்குடா கடற்கரையில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு

204 0

கற்பிட்டி ஆலங்குடா கற்கரைப் பகுதியிலிருந்து இனந்தெரியாத ஆணொருவரின் சடலமொன்று இன்று (18) காலை மீட்கப்பட்டுள்ளமாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்

இன்று திங்கட்கிழமை (18) காலை குறித்த கடற்கரை பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக நுரைச்சோலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

நீல நிறத்திலான டெனிம் காற்சட்டையும், அதே நிறத்திலான சேர்ட்டும் அணிந்திருந்த நிலையில் மீட்கப்பட்ட குறித்த நபர், 40 வயது மதிக்கத்தக்கவர் எனவும் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த எந்த தடையப் பொருட்களும் இருக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், குறித்த நபருடைய முகப் பகுதி பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

அத்துடன், சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த புத்தளம் மாவட்ட பதில் நீதிவான், நீதவான் பரிசோதனையை நடத்திய பின்னர் சடலத்தை புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சடலம் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.