ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் பாராளுமன்றத்தின் பெரும்பான்மையில்லாமலேயே அதிகாரம் செலுத்தி வருகின்றது. அரசாங்கத்தை உறுதிப்படுத்த தேசிய அரசாங்கத்தை அமைப்பதாக குறிப்பிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது. உறுதியான அரசாங்கத்தை அமைக்க வேண்டுமாயின் பாராளுமன்ற தேர்தலுக்கான வழிமுறைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தினார்.
பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தேசிய அரசாங்கம் உருவாக்கம் என்பது சாத்தியமற்றதன் காரணமாகவே அரசாங்கம் அப்பிரேரணை மீதான விவாதத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது.
இப்பிரச்சினைகள் அனைத்திற்கும் தேர்தல் ஊடாகவே தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் . ஆகவே பொய்யான விடயத்திற்கு அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்காமல் தேசிய அரசாங்கம் உருவாக்கம் தொடர்பிலான பிரேரணையையும் மீள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.