யாழில் மோட்டார் சைக்கிளை திருட முயற்சித்த ஒருவர் கைது

308 0

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் வர்த்தக நிலையம் முன்பாக நிறுத்தி விடப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடிச் செல்ல முயற்சித்தவரை வர்த்தகர்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

கஸ்தூரியார் வீதியில் உள்ள நகை கடை ஒன்றில் நகைத் தொழில் புரியும் இளைஞன், மோட்டார் சைக்கிளை வீதியோரம் நிறுத்தி விட்டு கடையில் பணியில் ஈடுபட்டிருந்தார் . இதன் போது வீதியால் பயணித்த ஒருவர் அதனை அவதானித்து குறித்த மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றுள்ளார்.

இதனை அவதானித்த வர்த்தகர்கள், குறித்த நபரைச் சுற்றி வளைத்தனர். “இது எனது மோட்டார் சைக்கிள் எரிபொருள் நிரப்புவதற்காக உருட்டிச் செல்கிறேன்” என்று குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் சந்தேகம் கொண்ட வர்த்தகர்கள், அயிலில் உள்ள அனைத்து வர்த்தக நிலையத்தவர்களையும் அழைத்துள்ளனர். அதன் போது மோட்டார் சைக்கிள் உரிமையாளர் விவரத்தை அறிந்து குறித்த இடத்துக்கு வந்தார்.

மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் வாகன வரிப்பத்திரம் , காப்புறுதிப் பத்திரம் என்பவற்றுடன் பதிவுச் சான்றிதழையும் காட்டி தனது மோட்டார் சைக்கிளைப் பெற்றுக் கொண்டார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. பொலிஸார் குறித்த நபரைப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

Leave a comment