சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேகநபர் கைது

308 0

கொக்குவில் பகுதியில் பதின்ம வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேகநபரை கோப்பாய் பொலிஸார் இன்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர், 

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

கொக்குவில் பகுதியில் பாதிக்கப்பட்ட சிறுமியும் அவரது தாயாரும் வசித்து வந்துள்ளனர். சிறுமியின் தந்தை ,விவாகரத்து பெற்ற நிலையில் சிறுமி தாயாருடன் வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில் தாயாருக்கும் வேறு ஒரு நபருக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதனால் குறித்த நபர் சிறுமியின் வீட்டுக்கு வந்து சென்ற நேரங்களில், சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார். 

அது தொடர்பில் சிறுமி தனது தாயாருக்கு தெரியப்படுத்தியுள்ளார். இருந்த போதிலும் தாயார் அது தொடர்பில் கவனம் செலுத்தாத நிலையில் சிறுமி தனது தந்தைக்கு தெரியப்படுத்தியுள்ளார். அது தொடர்பில் தந்தையார் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

தந்தையின் முறைப்பாட்டின் பிரகாரம் தாயின் பாதுகாப்பில் இருந்த சிறுமியை மீட்ட பொலிசார் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். 

அத்துடன் சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிசார் முன்னெடுத்த போது சந்தேக நபர் இந்தியாவுக்கு தப்பி சென்றுள்ளார். 

இந்நிலையில் சந்தேகநபர் நேற்றைய தினம் யாழில்.அவரது உறவினர் ஒருவரின் இறுதி சடங்குக்கு வந்துள்ளமையை பொலிசார் அறிந்து கொண்டதனை அடுத்து சந்தேகநபரை இன்றைய தினம் திங்கட்கிழமை பொலிசார் வேன் ஒன்றில் சென்று கொண்டிருந்த போது கைது செய்ததுடன் அவரது வேனுயும் பறிமுதல் செய்தனர். 

குறித்த நபரை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சந்தேக நபரை நாளைய தினம் யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 

Leave a comment