பாராளுமன்ற வன்முறை ; 59 உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டு

240 0

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் சம்பந்தமாக விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் குழப்பம் விளைவித்த 59 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு இது தொடர்பில் விசாரணை நடத்திய பாராளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளை அடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகிய பிரதான இரண்டு கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்ட அரசியல் முரண்பாடுகளின் போது கடந்த நவம்பர் மாதம் 14,15,16 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள் மற்றும் மோதல்களை அடுத்து நாட்டில் பாரிய குழப்பநிலை உருவாகியது.

இதனை அடுத்து பாராளுமன்ற வாரத்தில் ஏற்பட்ட குழப்பங்களின் போது அரச ஊழியர்களை தாக்கிய மற்றும் அரச சொத்துக்களை சேதமாக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் எழுவர் கொண்ட பாராளுமன்ற விசாரணைக் குழுவொன்று சபாநாயகர் கரு ஜெயசூரியவினால் நியமிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையிலான இந்தக் குழு கடந்த செவ்வாய்க்கிழமை சபாநாயகர் கருஜயசூரியவிடம் அறிக்கையை சபாநாயகரிடம் கையளித்தது.

மேற்படி குழுவானது மேற்கொண்ட சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், 

59 பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற விதிகள், சட்டத்தை மீறியுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு குற்றம்சாட்டப்பட்டுள்ள 59 உறுப்பினர்களில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த 54 பேரும், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 4 உறுப்பினர்களும், மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் ஒருவரும் அடங்கியுள்ளனர்.

அதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர மீது அதிகளவில் 12 குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. அதையடுத்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின், ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, பத்ம உதயசாந்த ஆகியோருக்கு எதிராகவும் அதிகளவு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.

குழப்பங்கள் நடந்தபோது, எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகள் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்கள் மிளகாய்தூள் வீசியது, சபாநாயகரின் ஆசனத்தில் நீர் ஊற்றியது, பொலிஸாரைத் தாக்கியது, கத்தி போன்ற பொருட்களைப் பயன்படுத்தியதும் கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் மூன்று நாள் குழப்பங்களின்போது, 3,25,000 ரூபா சேதங்கள் ஏற்படுத்தப்பட்டன எனவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதுடன், அறிக்கை சபாநாயகரின் ஆய்வுக்குப் பின்னர்  நடவடிக்கைகள் எடுப்பதற்காக சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment