யாழ் மாநகர முதல்வர் – பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கு இடையில் விசேட சந்திப்பு

219 0

யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்டிற்கும் – தென் ஆசியாவின் திணைக்கள தலைவரும் – இந்தியாவின் இணைப்பாளருமாகிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பேர்கஸ் அல்ட் ஒபே (Head – South Asia Department and India co–ordinator) மற்றும் கொழும்பு பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் முதன்மைச் செயலரும், சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான ஆலோசகர் பவுல் கிறீன் ஆகியோருக்கிடையில் முதல்வரின் அலுவலகத்தில் நேற்று (23) விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இச் சந்திப்பில் அண்மையில் இடம்பெற்ற ஆட்சிமாற்றம் குறித்தும் அதன் பிற்பாடான நிலைமைகள் குறித்தும் உயர்ஸ்தானிகர் வினவியிருந்தார். அதற்கு பதிலளித்த முதல்வர் அவர்களி நாட்டில் ஏற்பட்ட ஜனநாயக மறுப்பு குறித்தும் அதன் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்ட விதம் குறித்தும் தெளிவுபடுத்தினார்.

மேலும் ஆட்சி மாற்றத்தினால் யாழ். மாநகரில் இடம்பெறவிருந்த பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் தடைப்பட்டதனையும், தற்போது அதனை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மக்கள் தற்பொழுது மகிழ்ச்சியாக வாழ்கின்றார்களா? என்ற உயர்ஸ்தானிகரின் கேள்விக்கு ´இல்லை. மிக நீண்ட காலமாக அரசியல் தீர்வை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்ற மக்களுக்கு இன்னும் நியாயமான தீர்வு கிடைக்கவில்லை. இத் தீர்வை பெற்றுக் கொள்வதற்கான அனைத்து விதமான முன்னெடுப்புக்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது. இதே சமயம் எதிர்வருகின்ற மார்ச் மாதம் இலங்கை குறித்து எவ்வாறான தீர்மானம் முன்வைக்கப்படும்? அரசியல் மாற்றங்கள் எவ்வாறு அமையும்? பெரும்பாண்மை இல்லாத இவ் அரசாங்கத்தினால் கொண்டுவந்திருக்கின்ற அரசியல் சாசன முன்மொழிவை எவ்வாறு 2/3 உடன் நிறைவேற்ற முடியும்? அல்லாது போனால் மக்களின் எதிர்பார்ப்பு இழவு காத்த கிளி போல ஆகிவிடுமா என்ற அச்சம் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது´ என்றார்.

அரசியல் தீர்வு விடயங்களில் தமிழ் தேசியக் கூட்டடைப்பின் நிலைப்பாடுகளை முதல்வர் விளக்கியிருந்ததுடன், உயர்ஸ்தானிகர் தானும் தலைவர் இரா.சம்மந்தனை சந்தித்து மக்களின் விடயங்கள், அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் உரையாடியதாகவும் குறிப்பிட்டார்.

முதல்வரின் அனைத்துவித செயற்பாடுகளுக்கும் தமது ஒத்துழைப்புக்களை தொடர்ந்தும் வழங்க தயாராக இருப்பதாகவும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டிருந்தார்.

இச் சந்திப்பில் யாழ் மாநகர ஆணையாளர் திரு. ஜெயசீலன், பிரதி ஆணையாளர் சீராளன் ஆகியோர் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a comment