சேனா படைப்புழுவை அழிக்க அதிகாரத்துடனான ஜனாதிபதி செயலணி அவசியம் – பந்துல

222 0

சேனா படைப்புழுவினை முற்றாக அழிக்க வேண்டுமாயின்  அதிகாரம்  கொண்ட ஜனாதிபதி    செயலணி அமைக்கப்பட  வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட   விவசாயிகளுக்கு  விரைவாக நட்டஈட்டினையும்,  மீள்   விவசாய உற்பத்தி  செயற்பாடுகளுக்கான  உதவிகளையும்   அரசாங்கம்  விவரைவாக   வழங்க வேண்டும்   என பொறுப்பு   வாய்ந்த    எதிர்க் கட்சியாக   அழுத்தம்   கொடுப்பதாக     பாராளுமன்ற உறுப்பினர் பந்துல  குணவர்தன தெரிவித்தார்.

வஜிராஷ்ரம விகாரையில் நேற்று செவ்வாய்கிழமை  இடம்  பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர்  மேலும் குறிப்பிடுகையில் ,

தேசிய உற்பத்திகளை மேம்படுத்தும் விடயத்தில் அரசாங்கம் மந்தகரமாகவே  செயற்படுகின்றது. கடந்த அரசாங்கத்துடன் ஒப்பிடுகையில் தேசிய அரசாங்கத்தில் தேசிய உற்பத்திகள் பெருமளவு வீழ்ச்சியடைந்ததுடன். எமது  நாட்டில் உற்பத்தி  செய்யப்பட்ட உணவு தானியங்கள்  இறக்குமதி  செய்யும்   அவல நிலை இன்று  ஏற்பட்டுள்ளது. சோளப்பயிர்களை தாக்கியுள்ள    சேனா  படைப்புழுவினை    கட்டுப்படுத்த அரசாங்கம் ஆரம்பத்திலே  முறையான உபாய முறைகளை பின்பற்றவில்லை.

2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சோள உற்பத்தி 22 சதவீதத்தால் தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் கடந்த ஒரு சில நாட்களில் மாத்திரம் சோள பயிர் செய்கையானது தேசிய உற்பத்தி துறையில்  19சதவீத  வீழ்ச்சியினை எட்டியுள்ளது. இந்நிலைமை தொடருமாயின்  வீழ்ச்சியடைந்துள்ள தேசிய உற்பத்திகள் மேலும் பாதிப்படையும்.

   தற்போது அரச அதிகாரிகள் சேனா படைப்புழுக்களை கட்டுப்படுத்த மாறுப்பட்ட உபாய முறைகளை குறிப்பிட்டுள்ளனர். அவைகள் ஒருபோதும் முறையான  பெறுபேற்றினை அளிக்காது. இதற்கு  பொருப்பு வாய்ந்த ஒரு  அமைப்பினை உருவாக்க வேண்டும் . இவ்விடயத்தில் ஒருபோதும்  அரசியல்  செல்வாக்கு  இடம் பெறகூடாது. ஆகவே ஜனாதிபதி   இவ்விடயத்தில் நேரடியாக தலையிட்டு  ஜனாதிபதி செயலணியினை அமைக்கவேண்டும்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு  நிவாரண நிதிகளும், மீள் விவசாய உற்பத்திகளுக்கான  ஏற்பாடுகளையும் அரசாங்கம் விரைவாக  வழங்க வேண்டும். என்ற  விடயத்தையும்  பொருப்பு வாய்ந்த எதிர்கட்சியாக  தெரிவித்துக் கொள்கின்றோம். தேசிய உற்பத்திகள் தற்போது  மாறுப்பட்ட விதத்தில் அழிவடைந்து வருகின்றது ஆகவே  அரசியல்  விடயங்களை புறம் தள்ளி அனைவரும் ஒன்றினைந்து  செயற்பட வேண்டும் என்றார்.

Leave a comment