பஸ்யால, வீரகுல, வீரசூரிய கந்த பகுதியில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பஸ்யால, வீரகுல, வீரசூரிய கந்த பகுதியில் நடத்திச் சென்ற போலி வைத்திய மத்திய நிலையத்தில் வைத்தியராக தன்னை அடையாளப்படுத்தி வந்த நபர் ஒருவரிடம், சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பல்வேறு வகையான போதை மாத்திரைகள் மற்றும் மாத்திரை உறைகள் (Capsules) மீட்கப்பட்டுள்ளதாக, வீரகுல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீரகுல பொலிஸ் குழுவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இவ்வாறு குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதான சந்தேக நபர் ஒருவரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு, சந்தேக நபர் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வீரகுல பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் வீரகுல பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.