காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்- மக்கள் கூட்டணி

348 0

நீங்கள் வழங்கிய உறுதிமொழிக்கு அமைவாக வடக்கு, கிழக்கில் காணிகளை விடுவிக்கும் செயற்பாட்டைப் பூர்த்தி செய்யுமாறு நாம் மீண்டும் ஒருமுறை உங்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம். குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கேப்பாப்பிலவு கிராமத்திலுள்ள காணிகளின் விடுவிப்புத் தொடர்பில் நாம் விசேடமாக சுட்டிக்காட்டுகின்றோம் என காணி உரிமைக்கான மக்கள் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

நீங்கள் வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாது இருந்தால் மக்கள் மோசமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்புண்டு. அவர்கள் அத்தகைய இறுதிநிலைக்குத் தள்ளப்படுவதற்கு முன்னர் நீங்கள் வழங்கிய உறுதிமொழிக்கு அமைய, விடுவிக்கப்படாதுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னதாக வடக்கு, கிழக்கில் படையினர் வசமுள்ள காணிகளை மீளவும் மக்களிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பணிப்புரை விடுக்கப்பட்ட நிலையில், இன்னமும் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. 

இந்நிலையில் காணி உரிமைக்கான மக்கள் கூட்டணி என்ற அமைப்பு ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டப்பட்டுள்ளது.  

Leave a comment