கூட்டணியில் இருந்தபோது மத்திய அரசை தி.மு.க. கண்டிக்கவில்லையா?

238 0

கூட்டணியில் இருந்தபோது மத்திய அரசை தி.மு.க. கண்டிக்கவில்லை என்ற அமைச்சர் ஜெயக்குமாரின் குற்றச்சாட்டுக்கு சவால் விட்டு மு.க.ஸ்டாலின் பேசினார்.

சட்டசபையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அமைச்சர் ஜெயக்குமார் எழுந்து, ‘மத்திய – மாநில அரசுகளின் உறவு குறித்து, எதிர்க்கட்சி தலைவர் நல்ல திரைக்கதை வசனத்துடன் ரசிக்கும்படி கூறினார்” என்றார். அதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அந்த நேரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுந்து, “நீங்கள் விமர்சனம் செய்யும்போது நாங்கள் அமைதியாக இருந்தோம். இப்போது அமைச்சர் பதில் அளிக்கும்போது நீங்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?” என்றார். தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “17 ஆண்டு காலமாக மத்திய காங்கிரஸ் அரசுடன் கூட்டணி வைத்திருந்தீர்கள். 1996 – 2001, 2006 – 2011-ம் ஆண்டுகளில் நீங்கள் (தி.மு.க.) ஆட்சியில் இருந்தபோது, ஆண்டுதோறும் வாசிக்கப்பட்ட கவர்னர் உரையில் மத்திய அரசை கண்டித்து எதுவும் கூறப்படவில்லை. மாமியார் உடைத்தால் மண் சட்டி, மருமகள் உடைத்தால் பொன் சட்டியா?” என்றார்.

நிரூபிக்க அமைச்சர் தயாரா?

அதற்கு மு.க.ஸ்டாலின், “மத்திய அரசை நாங்கள் விமர்சித்திருக்கிறோம். அதை நிரூபிக்க நான் தயார்?. இல்லை என்று நிரூபிக்க அமைச்சர் தயாரா?. அவையில் வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது. இது வெளியில் தொலைக்காட்சிக்கு கொடுக்கும் பேட்டி மாதிரி கிடையாது. சொன்னதை நிரூபிக்க வேண்டும்” என்றார்.
இதனால், சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a comment