புதூர் பகுதியில் கடந்த முதலாம் திகதி இரவு பொலிஸாரை கண்டதும் தனது கையில் இருந்த பையை தூக்கி எறிந்து விட்டு நபரொருவர் அப்பகுதியில் இருந்து தப்பி சென்றிருந்தார்.
வீசி சென்ற பையினை பொலிஸார் சோதனையிட்ட போது , அதனுள் ஒரு கைத்துப்பாக்கி , 4 கிரனைட்கள் , 2 கைத்தொலைபேசிகள் , உள்ளிட்ட பொருட்கள் பையினுள் இருந்தாக கனகராஜன் குள பொலிஸார் தெரிவித்தனர்.
அதனையடுத்து மறுநாள் 2ஆம் திகதி இராணுவத்தினர் , பொலிஸார் , பொலிஸ் விசேட அதிரடி படையினர் , புலனாய்வாளர்கள் என பலரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டு அப்பகுதியில் தேடுதல் நடாத்தினார்கள். அதன் போது எவரும் கைது செய்யப்பட்டவில்லை.
இந்நிலையில் தொடர் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , வீட்டில் வேட்டை துப்பாக்கி வைத்திருந்த குற்றசாட்டில் ஜெகதீஸ்வரன் கஜேந்திரன் (வயது 20) என்பவர் கைது செய்யப்பட்டார்.
அதேவேளை வீட்டுக்கு விசாரணைக்கு பொலிஸார் சென்ற சமயம் கணவர் வீட்டில் இல்லை எனவும் , கணவர் எங்கே போனார் என தெரியாது எனவும் கூறிய பத்து வயது பெண் பிள்ளையின் தயாரான ஸ்ரீகாந்த் தர்சினி (வயது 35) என்பவரை பொலிஸார் கைது செய்தனர். அத்துடன் அவரது 10 வயது மகளையும் பொலிஸார் பொலிஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
அத்துடன் ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் நெடுங்கேணி பகுதியை சேர்ந்த கார்த்திக் எனும் இளைஞனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரிடமும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.