திருவாரூர் இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடுமா? தமிழிசை சவுந்தரராஜன் பதில்

262 0

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடுமா? என்பது குறித்து டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலளித்தார்.
தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை கமலாலயத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் இடைத்தேர்தலை எப்படி எதிர்கொள்வோம் என்று நாங்கள் இன்னும் அறிவிக்கவில்லை. இப்போது எங்களுடைய முழு கவனம் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை, நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பதில் இருக்கிறது. எனவே திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டுமா? தேவை ஏற்பட்டால் எப்படி எதிர்கொள்வது குறித்து முடிவு செய்வோம்.

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணியில் இல்லாத கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் இருக் கிறது.

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்வார். அதுமட்டுமின்றி தனி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள வாய்ப்பு உள்ளது. மதுரை ‘எய்ம்ஸ்’ ஆஸ்பத்திரி அடிக்கல் நாட்டு விழாவிலும் பங்கேற்க வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு வருகிற போது கருப்புக்கொடி காட்டப்போவதாக வைகோ கூறி உள்ளாரே? என்று கேட்டதற்கு வைகோவால் ஒன்றுமே செய்ய முடியாது. அவரை அறிவாலயத்துக்குள் (தி.மு.க. கட்சி அலுவலகம்) விடுவார்களா? மாட்டார்களா? என்ற சந்தேகம் இருக்கிறது. அதனை போக்குவதற்கு எதையாவது செய்ய வேண்டும். பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்புகொடி காட்டினால் ராகுல்காந்தி மகிழ்வார். அதனால் கூட்டணியில் சேர்த்துக்கொள்வார்கள் என்று வைகோ கணக்கு போடுகிறார். அவருடைய கணக்கு எப்போதும் தப்பு கணக்கு தான் என்றார்.

Leave a comment