துணை வேந்தர் நியமனத்தை எதிர்த்து வழக்கு – தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ்

249 0

தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தை எதிர்த்த வழக்கிற்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

கடலூர் மாவட்டம் புதுப்பேட்டையை சேர்ந்த கே.சக்கரவர்த்தி. இவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள கோவாரண்டோ மனுவில், ‘10 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே துணை வேந்தர் பதவிக்கு தகுதியானவர்கள் என்று பல்கலைக்கழகம் மானிய குழு விதி உள்ளது. ஆனால், இந்த விதியை மீறி, தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக தங்கசாமி நியமிக்கப்பட்டுள்ளார். தங்கசாமி உதவி பேராசிரியராக மட்டுமே பணியாற்றியுள்ளார். ஆனால், இணை பேராசிரியராக 6 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருப்பதாக தங்கசாமி தன்னுடைய சுயவிவரக் குறிப்பில் தெரிவித்துள்ளார். எனவே துணை வேந்தராக பணியாற்ற தங்கசாமிக்கு தடை விதிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் விசாரித்தனர். பின்னர், இந்த வழக்கிற்கு பதில் அளிக்கும்படி, தமிழக அரசு, பல்கலைக்கழக மானியக்குழு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Leave a comment