யாழ்.வைத்தியசாலையில் நோயாளியிடம் நகையைத் திருடிய பெண்ணுக்கு விளக்கமறியல்

191 0

யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளியிடம் தங்க நகையைத் திருடிய குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட பெண், நல்லூர் ஆலயத் திருவிழாக் காலத்தில் பெண் ஒருவரிடம் சங்கிலி அறுத்தவர் என்பது விசாரணைகளில் தெரியவந்தது.

அதனால் வைத்தியசாலையில் நோயாளியிடம் திருடிய குற்றச்சாட்டு வழக்கில் பிணை வழங்கிய யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம், நல்லூர் ஆலயத்தில் பெண்ணிடம் சங்கிலியை கொள்ளையடித்த வழக்கில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது. 

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு செல்வோரின் தங்க நகைகள் களவாடப்படுவது தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு தொடர்ச்சியாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. 

அது தொடர்பில் வைத்தியசாலை வளாகத்தினுள் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராக்களின் (சிசிடிவி) உதவியுடன் நகைகளை திருடி வந்த பெண்ணொருவர் அடையாளம் காணப்பட்டார். அவரை வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் துணையுடன் வைத்தியசாலை நிர்வாகம் மடக்கி பிடித்து காணொலி ஆதரத்துடன் யாழ்ப்பாண பொலிஸாரிடம் கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்னர் ஒப்படைத்தனர். 

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை வைத்தியசாலைக்கு வந்த வயோதிப பெண்ணொருவரிடம் இருந்து சங்கிலி ஒன்று களவாடப்பட்டுள்ளது. அது தொடர்பில் அந்த வயோதிபப் பெண் வைத்தியசாலை நிர்வாகத்திடம் முறையிட்டார். 

அதனையடுத்து கண்காணிப்பு கமராக்களை பரிசோதித்த போது , வைத்தியசாலையில் முன்னர் நகைகளை திருடிய குற்றசாட்டில் தம்மால் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பெண்ணே மீண்டும் திருட்டில் ஈடுபடுவதனை நிர்வாகத்தினர் கண்டறிந்தனர்.

அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவித்தனர். 

அந்த காணொலியை ஆராய்ந்த யாழ்ப்பாணம் பொலிஸாரை அந்தப் பெண்ணை முல்லைத்தீவில் வைத்து நேற்றுக் கைது செய்தனர். அத்துடன், மேலும் இரண்டு பெண்கள் உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.

அந்தப் பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நல்லூர் ஆலயத் திருவிழாக் காலத்தில் பெண்ணொருவரிடம் சங்கிலி அறுத்ததையும் அவர் ஒத்துக்கொண்டார். அந்தச் சங்கிலி நகை வேலை செய்பவரிடம் விற்பனை செய்ததையும் சந்தேகநபர் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நகை வேலை செய்பவரை அழைத்து விசாரணை செய்த பொலிஸார், சந்தேகநபரால் விற்பனை செய்யப்பட்ட சங்கிலி உருக்கப்பட்டு தங்கக் கட்டியாக மீட்டனர். அதனால் நகை வேலை செய்பவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளியிடம் தங்க நகையைத் திருடியமை மற்றும் நல்லூர் ஆலயத் திருவிழாக் காலத்தில் பெண் ஒருவரிடம் சங்கிலி அறுத்தமை என இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கு தனித் தனியே வழக்குகளைப் பதிவு செய்தனர். 

சந்தேகநபரான பெண், அவருடன் கைது செய்யப்பட்ட மேலும் மூவர் மற்றும் நகை வேலை செய்பவர் என 5 பேர் யாழ்ப்பாணம் நீதிவான் அன்ரனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் இன்று முற்படுத்தினர். அத்துடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நகைப் பறிகொடுத்த வயோதிப் பெண்ணும் நீதிமன்றில் முன்னிலையானார்.

வழக்குகளை விசாரணை செய்த நீதிவான், சந்தேகநபருடன் கைது செய்யப்பட்ட மூவரையும் நகைத் தொழிலாளியையும் பிணையில் விடுவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் திருடிய நகை சந்தேகநபரிடம் மீட்கப்பட்டதால் அந்த வழக்கில் அவருக்குப் பிணை வழங்கப்பட்டது.

எனினும் நல்லூர் ஆலயத்திருவிழாவில் பெண் ஒருவரிடமிருந்து அபகரித்த சங்கிலி உருக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த வழக்கில் சந்தேகநபரான பெண்ணை வரும் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் அன்ரனி சாமி பீற்றர் போல் உத்தரவிட்டார்

Leave a comment